Tuesday, September 16, 2008

நாச்சிமார்கோயிலடி இராஜன்

நாச்சிமார்கோயிலடி இராஜன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்து வில்லிசைக் கலைஞர் ஆவார். புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்
இவர் இலங்கையின் யாழ்ப்பாணம், நாச்சிமார்கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் தற்சமயம் ஜேர்மனியில் பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார். பாடசாலையில் பயின்ற காலத்திலேயே இவரது கலை ஆர்வம் வெளிப்பட்டது.

கலையுலக வாழ்வு
இவர் வில்லிசைகளில் வல்லவர். வில்லிசை நிகழ்ச்சிகளை 1968 இல் ஆரம்பித்து இற்றை வரை நடாத்தி வருகிறார். 1972 இலிருந்து "நாச்சிமார்கோயிலடி இராஜன் வில்லிசைக் குழுவை" நடாத்தி வருகின்கிறார். 1993இல் ஜெர்மனியின் றெயினை ஜெர்மன் தமிழ்ச் சங்கத்தின் வாணி விழாவில் பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமனால் "ஈழவில்லிசைச் செம்மல்" என்ற பட்டத்தைப் பெற்றார். 1996இல் கனடாவில் நிகழ்ந்த உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் அதன் தலைவர் வீரப்பனால் "வில்லிசைக் காவலர் " என்ற பட்டத்தைப் பெற்றார். ரீ.ரீ.என் தொலைக்காட்சியில் இவரது பல வில்லிசைகள் ஒளிபரப்பாகின.

நாடகத் துறை
நாடகத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. ஜெர்மனியில் 1993, 1994, 1995, 1998 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் நடைபெற்ற நாடகப் போட்டிகளில் நான்கு முறைகளும் முதற்பரிசுகளைப் பெற்றுள்ளார். பிறேமன் தமிழ் கலை மன்றத்திற்காக பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். மூன்று தடவைகள் சிறந்த இயக்குனருக்கான தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தங்கப்பதக்கம்
1994 இல் இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றம் நடாத்திய நாடகப் போட்டியில் "எதிர்பார்ப்புகள்" நாடகம் இவரது இயக்கத்தில் முதற் பரிசு பெற்றது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவுசெய்யப்பட்டு இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றத்தால் இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

1995 இல் இராட்டிங்கனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் "நீர்க்கோலம்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவானது. நீர்க்கோலம் சிறந்த நாடக பிரதியாக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், அந்த நாடகத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், சான்றிதழும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் வழங்கப்பட்டது.

1998 இல் எசன் நகரில் ஈழமுரசு பத்திரிகை நடாத்திய நாடகப் போட்டியில் "சுமைகள்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு ஈழமுரசு பத்திரிகையால் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது

திரைப்படத்துறை
புகலிட திரைப்படத்துறையிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. நினைவுமுகம் திரைப்படத்திற்கு திரைக்கதை, உரையாடல் எழுதி இணை இயக்கம், தயாரிப்பு ஆகியற்றில் தடம் பதித்துள்ளார். தொடர்ந்து ஏ.ரகுநாதனின் தயாரிப்பில் பாரிசிலிருந்து தயாரிக்கப்பட்ட தயவுடன் வழிவிடுங்கள் படத்திலும் நடித்துள்ளார். யாரிவர்கள், பொறி, இப்படியுமா? ஆகிய குறும்படங்களை எழுதி இயக்கியுள்ளார். தற்போது இலண்டனில் தயாராகி வரும் ஈழவர் திரைக் கலை மன்றத்தின் நீர்க்கோலம் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். பாரிசிலிருந்து தயாரிக்கப்படும் ஈழத்தவரின் முதல் திரைத் தொடர் நேசங்களுக்காக திரைக்கதை, உரையாடலில் பங்கெடுத்து வருகின்றார்.

வெளிவந்த நூல்கள்
எதிர்பார்ப்புகள் (நாடக நூல்)

Friday, September 05, 2008

கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்)

கே. எஸ். பாலச்சந்திரன் (மருதங்கேணி,பளை, இலங்கை) ஈழத்தின் மெல்லிசைப் பாடகர்களில் ஒருவர். வானொலிக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு
இவர் சிற்றம்பலம்(வல்வெட்டித்துறை), சின்னப்பிள்ளை(மருதங்கேணி) தம்பதிகளின் புதல்வர். போராளிக்கலைஞர் மேஜர் சிட்டுவின் சகோதரன். மருதங்கேணியில் பிறந்து வளர்ந்தவர். 17வயதுக்குப் பின் திருகோணமலைக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வாழ்வு அமைத்துக் கொண்டவர். 1985 இல் இருந்து ஜேர்மனியில் வட்கசன் நகரில் வசித்து வருகிறார்.

மெல்லிசைப் பாடல்கள்
இவர் சிறுவயதிலேயே பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் இசை நிகழ்சிகளில் மேடையேறிப் பாடினார். ஒரு சமயம் கொழும்பில் நடந்த ஒரு நிகழ்சியிலும் இவர் பாடிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் மெல்லிசை ஆர்வலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் இவரின் குரல் வளத்தைக் கண்டு இவரை அழைத்து இலங்கை வானொலியின் ஒரு விளம்பரத்துக்குப் பாட வைத்தார்கள். இப்படியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்குள் பிரவேசித்த இவர் அங்கு நடந்த ஒரு மெல்லிசைப் பாடகர் தேர்வில் கலந்து கொண்டார். குரலில் நல்ல வளம் மிக்க இவர் முதல் தரத்திலேயே மோகன்ராஜ் இன் தந்தை ஆர். முத்துச்சாமி அவர்களால் தேர்வு செய்யப்பட்டு மெல்லிசைப் பாடகர் ஆனார். இவரது முதற்பாடல் இசைக்காய் நான் உனது இதயத்தை... என்று தொடங்கும் பாடல். தற்சமயம் ஜேர்மனியின் பல பாகங்களிலும் அரங்கேறி இசை நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டிருக்கிறார்.

இவர் திரைப்படப் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இவர் பாடிய முதல் திரைப்படம் புதிய காற்று.

பாடிய சில மெல்லிசைப் பாடல்கள்
1-பெற்ற மனம் பித்து என்பார் பிள்ளை மனம் கல்லு என்பார்... (வரிகள்:ஈழத்து இரத்தினம், இசை: மோகன்ராஜ்)
2-இசைக்காய் நான் உனது இதயத்தை...
3-தாயான உன்னை நோயாளி ஆக்கி தரை மீது வந்தேன் அம்மா...
4-சந்திர முகம் உனதோ சிந்திடும் நிழல்.. (இசை: மோகன்ராஜ்)
5-அன்னைக்கு இல்லாத பாசமா... (வரிகள்: ஈழத்து இரத்தினம்)

பாடிய சில திரைப்படப் பாடல்கள்
1-மலை நாட்டில் ஒரு மாற்றம் தர வேண்டும்... (படம்: புதிய காற்று)
2-நான் உங்கள் தோழன்... (படம்: வி. பி. கணேசனின் நான் உங்கள் தோழன்)

இசைக்குழு
இவர் மிகவும் பிரபலமாக இருந்த சுண்டிக்குளி இராஜன் இசைக்குழுவின் இயக்குனராகவும் இருந்தார். முதலில் இந்த இசைக்குழுவை இயக்கி வந்த குணசேகரன்(பொறியியலாளர்) என்பவரே இவரிடம் இந்த இசைக்குழுவைக் கையளித்தார்.

சுவையான தகவல்
ஒரே காலத்தில், ஒரே பெயரில் இரு கலைஞர்கள் அதுவும் ஒரே இடத்தில் இருப்பது எத்துணை சிக்கல்களைத் தரக்கூடியது. அந்த சிக்கல்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலைஞர்களும், இலங்கை வானொலியின் நேயர்களும் ஆளாகும் வகையில் இந்த மெல்லிசைப் பாடகர் கே. எஸ் . பாலச்சந்திரனும், அண்ணை றைற் பாலச்சந்திரனும் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். இப்போதும் பலருக்கு இவர்களை யார் யாரென இனம் காணுவதில் குழப்பம் இருக்கிறது. இருவருமே கே. எஸ் . பாலச்சந்திரன்தான்.

வெளி இணைப்புக்கள்
பெற்ற மனம் பித்து என்பார்

Monday, August 25, 2008

தாட்சாயணி (பிரேமினி )

தாட்சாயணி என்ற புனைபெயரில் எழுதிக் கொண்டிருக்கும் பிரேமினி சபாரத்தினம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதியவைகள், பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் முதற் பரிசில்களைப் பெற்றிருக்கிறார்.

தாட்சாயணி இலங்கையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி.

இவர் ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். இவரது கவிதை ஒன்று 1993இல் சுபமங்களா வெளியிட்ட இலங்கைச் சிறப்பிதழில் பிரசுரமாகி பலரது கவனத்தையும் பெற்றது. ஒரு மரணமும் சில மனிதர்களும் சிறுகதைத் தொகுப்பு 2004 - ஞானம் விருது பெற்றது.

இவரது நூல்கள்
ஒரு மரணமும் சில மனிதர்களும் - சிறுகதைத் தொகுப்பு (2004)

சுல்பிகா

சுல்ஃபிகா ஈழத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் கவிஞர். எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், சுமார் பத்து ஆண்டு காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பலகலைக் கழகத்தின் கல்வியியல் டிப்ளோமாப் பட்டமும் பெற்ற இவர் பின்னர் இலங்கைத் தேசிய கல்வி நிறுவகத்தில் செயல்திட்ட அதிகாரியாகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். பெண்களின் முன்னேற்றம், விஞ்ஞானக் கல்வி, கல்விச் சிந்தனைகள் என்பன தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவரும் இவர் கவிஞராக மட்டுமன்றி ஆய்வறிவாளராகவும் முகிழ்த்துள்ளார்.

இவரது நூல்கள்
விலங்கிடப்பட்ட மானிடம் (1994)

சித்திரலேகா மௌனகுரு

சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.

இவரது நூல்கள்
சொல்லாத சேதிகள்
சிவரமணி கவிதைகள்
உயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)

கோகிலம் சுப்பையா

கோகிலம் சுப்பையா இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர்.

இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் (1947) பதுளை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையா என்பவரை திருமணம் செய்ததின் மூலமே மலையக மக்களின் வாழ்க்கையை அறிந்து கொண்டவர். 1956ல் செக் நாட்டில் நடைபெற்ற உலகப் பெண் தொழிலாளர்களின் மகாநாட்டில், மலையகப்பெண்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். அங்கே தமிழ் அறிஞரான பேராசிரியர் Kamil Zvelebil அவர்களைச் ச்ந்திக்க நேர்ந்ததினால் அவரின் ஆலோசனைப்படி தனது தூரத்து பச்சை நாவலை எழுதத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார். 1965 இல் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியிடப்பட்ட இந்த நாவல், Mirage என்ற பெயரில் ஆங்கிலத்தில் இவராலேயே மொழிபெயர்க்கப்பட்டது. பல கவிதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இவரது நூல்கள்
தூரத்துப் பச்சை (நாவல்)
Mirage தூரத்துப்பச்சை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு )

இவரைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் (ஆங்கிலத்தில்)

Tuesday, August 05, 2008

வாசுகி கணேஷானந்தன்

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்டவரும் அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவின் ஹார்வார்ட் கல்லூரியில் பயின்று தற்போது நியூயோர்க்கில் வசித்துவருபவருமாகிய இளம் பெண் எழுத்தாளர் வாசுகி கணேஷானந்தன் 'லவ் மேரேஜ்'( காதல் திருமணம்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் வெளியான இந்த ஆங்கில நாவல் இலங்கை இனமோதலை பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட ஒன்று.

இலங்கை இனப்பிரச்சினையை பின்புலமாகக் கொண்டு கடந்த ஒரு சில தசாப்தங்களில் எழுதப்பட்ட சில நாவல்கள் வரிசையில் இதுவும் வருகிறது.

கதை அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழும் இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெண்ணான யாழினியையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகாலம் போராளியாக இருந்து, நோய்வாய்ப்பட்ட நிலையில் வாழ்க்கையின் இறுதி நாட்களில், கனடாவுக்கு செல்ல புலிகளால் அனுமதிக்கப்படும் அவரது மாமா குமரன் ஆகியோரையும் சுற்றிச் சுழல்கிறது.

இந்தக் கதை மூலம் இலங்கையின் இனப்பிரச்சினை, ஆயுதப்போராட்டம், இனப் பிரச்சினையின் சமூகத்தாக்கம் ஆகியவற்றை வாசுகி ஆராய்கிறார்.

Saturday, June 14, 2008

சிவலிங்கம் சிவபாலன்

எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் (கட்டட வரையுனர்) இலக்கியச் செழுமை மிக்க யாழ்ப்பாணத்திலுள்ள நாயன்மார்கட்டு கிராமத்தில் 1954ல் பிறந்து, வீரம் விழைந்த உரும்பிராய் மண்ணில் ஊன்றிக் கால் பதித்தவர்.

1985 இல் பிரான்சிற்கு புலம் பெயர்ந்தார். பழகுவதற்கு இனிமையானவர். எவரையும் எளிதில் நண்பராக்கிக் கொண்டு விடுவார். தமிழ் மக்களுக்கான விடியல் விரைவில் வரவேண்டும் என விரும்பும் பலரில் இவரும் ஒருவர். வி. ரி. இளங்கோவன்.. தியாகி சிவகுமாரன் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார்.

ஊரில் இருந்த காலத்திலேயே தேன்மலர் எனும் சஞ்சிகையை நடத்தியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை என தன் எழுத்தை விரிவு படுத்தினார். ஈழமுரசு, எரிமலை, உயிர்நிழல், போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதி வந்துள்ளார். 1998 ல் ‘சுரங்கள் மாறி……’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். பலரையும் நேசித்தார். எழுத்தாளர் கலாநிதி சொக்கன் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவரின் மாணவன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அதனால்தான் காற்றுவெளி நூலகம் வெளியிடும் இலக்கியப்பூக்கள் எனும் தொகுதிக்கு கலாநிதி சொக்கன் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதித் தந்துள்ளார்.

நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் இங்கிலாந்திற்கு வந்த பின்பு ஒரு இலக்கிய வெறுமையை உணர்ந்தவராகக் காணப்பட்டார். அதனால்தானோ என்னவோ காற்றுவெளி நூலகத்தை தன் வாசிப்புக்காகப் பயன்படுத்த தொடர்பு கொண்டார். சில நாட்களிலேயே இதய அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னரும் இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்புகளை அதிகமாகவே பேணிவந்தார். இலக்கியம் பற்றி பேசுவதற்கான தன் ஆதங்கங்களை, ஆர்வத்தை எழுத்தாளர்களுடன் பேசும் போது வெளிப் படுத்தினார். அவரின் வார்த்தைகளில் மெல்லியதான சோகம் இழையோடியதையும் எம்மால் உணர முடிந்தது. சிறுவயதின் நாடக முயற்சிகளை மீட்டுப் பார்த்து இப்பொழுது அது முடியாத ஏக்கம் எமக்குப் போலவே அவருக்கும் இருந்துள்ளது. தன் படைப்புகள் முழுவதையும் தொகுத்து ஒரு நூலாகவும், தனித்து ஒரு நாவலும் எழுதத் திட்டமிட்டிருந்தார்.

இவர் 22.05.2008 லண்டனில் காலமானார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டன் சென்ற இவருக்கு திடீரென இருதய வருத்தம் ஏற்பட்டது. அதனால் உடன் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. பின்பு அவர் சுகமடைந்து வந்தார். ஆனாலும் 22ம் திகதி திடீரென ஏற்பட்ட மயக்கம் அவரை மீளாத்துயிலில் ஆழ்த்திவிட்டது.

கடந்த 10ம் திகதி (10 - 05 - 2008) மாலை லண்டனில் நடைபெற்றஇ வி. ரி. இளங்கோவன் அவர்களின் 'இளங்கோவன் கதைகள்" சிறுகதைத் தொகுப்பு அறிமுகவிழாவிலும் இவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதுவே இவர் கலந்துகொண்ட இறுதி இலக்கிய நிகழ்வாகும். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப்பல படைப்புகளைத் தந்த சிவபாலன் ஐரோப்பாவில் இயங்கும் பல்வேறு தமிழ் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டவர்.

புன்சிரிப்புத் தவழும் அழகான தோற்றமும், எவருடனும் அன்பாக இனிய குரலில் பேசும் சுபாபமும் கொண்ட அவரை இலக்கிய நெஞ்சங்கள் எவரும் எளிதில் மறந்திட முடியாது.

தகவல் - பதிவுகள்

Monday, May 19, 2008

தெ. நித்தியகீர்த்தி

தெ. நித்தியகீர்த்தி இலங்கையின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நாடக இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.

இவர் இலங்கையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலி கிழக்கைச் சேர்ந்தவர். தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் அவ்வப்போதான ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்தும் இலக்கிய உலகோடு இணைந்திருப்பவர். நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராக இயங்கி தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றி தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவுஸ்திரேலியாவிலும் அவர் ஓயவில்லை. அங்கும் விக்றோரியா தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து பணியாற்றியதோடு நாடகங்களும் எழுதி இயக்கி மேடையேற்றியிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நாடகத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர்.

இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகின. புலம் பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும் இவரது படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளிலும் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் சுடரொளி, ஞானம், அவுஸ்திரேலிய ஈழமுரசு போன்ற பல பத்திரிகைகளிலும் எழுதுகிறார். குறிப்பிடத்தக்க கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இவரது நூல்கள்
மீட்டாத வீணை (புதினம்), (கமலா வெளியீடு, முதற் பதிப்பு - மார்கழி 1974, பருத்தித்துறை, சிறீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம்)


இவரது நாடகங்கள்

ஈழத்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
தங்கப் பதக்கம்
தங்கம் என் தங்கை
நீதி பிறக்குமா?
பாட்டாளி
பிணம்
மரகதநாட்டு மன்னன்
வாழ்வு மலருமா

நியூசிலாந்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
கூடு தேடும் பறவைகள்
மரணத்தில் சாகாதவன்

அவுஸ்திரேலியாவில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
பறந்து செல்லும் பறவைகள்
ஊருக்குத் தெரியாது
வேங்கை நாட்டு வேந்தன்

இவரது நாடகங்களில் சில பரிசில்களும் பெற்றுள்ளன.

Thursday, January 31, 2008

இசையமைப்பாளர் நிரு (நிர்மலன்)

எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்ததெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர்.

இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் செஞ்சாரு. இசையில் எனக்கு ஆர்வம் வந்ததுக்கு அப்பாதான் முதல் காரணம்!’’ _ தாய் மண்ணில் கழிந்த பால்ய காலத்தோடு நிருவின் பேச்சு தொடங்குகிறது.

‘‘1983_ல் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் இலங்கையில் ஆரம்பிச்சது. அப்போ எனக்கு மூணு வயசு. திடீர் திடீர்னு தெருவில் ஆட்கள் ஏன் பதட்டமா ஓடுறாங்க, அடிக்கடி ஏன் கரெண்ட் கட் ஆகுது, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வெளியே ஏன் யாரும் நடமாடுறதில்லைனு எதுவும் புரியல. ‘‘முந்தின நாள் சாயங்காலம் வரைக்கும் எங்கூட விளையாடிட்டிருந்த பையன் மறுநாள் காலையில் வெடிகுண்டுத் தாக்குதலில் காலை இழந்திருப்பான். நாள் தவறாமல் அப்பாவைப் பார்க்க வரும் நண்பரை திடீர்னு மாசக்கணக்கில் பார்க்க முடியாது. காரணம் கேட்டா, அவரை ராணுவம் கூட்டிட்டுப் போய்க் கொன்னுட்டதாக வீட்டில் சொல்வாங்க.’’ என்று கூறும் நிருவால் சில அதிகாலை நேரங்களை இன்னும் மறக்கவில்லை.

‘‘இருட்டு விலகாத காலை நேரத்துல ராணுவம் ஊருக்குள்ள வந்து, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, வெளியே வரச் சொல்வாங்க. துடிப்பாக தெரியுற ஆண்களைத் தேர்ந்தெடுத்து, வரிசையாக நிக்க வைப்பாங்க. அடுத்த நிமிஷம் தெருவையே அதிர வைக்கிற மாதிரி துப்பாக்கிச் சத்தம் கேட்கும். வரிசையில் நின்ன எங்காளுங்க செத்துக் கிடப்பாங்க. ராணுவத்தின் கண்ணில் பட்டவங்க பெண்களாயிருந்தா, அவங்களோடவே கூட்டிட்டுப் போயிடுவாங்க. முகாமுக்குப் போய், பல நாட்களுக்குப் பிறகு, புத்தி பேதலிச்சு திரும்பி வந்தவங்களை எனக்குத் தெரியும்!’’ _ உணர்வுகள் மரத்துப்போன குரலில் நிருவின் ஞாபகம் தொடர்கிறது.

‘‘போர்ச்சூழல் மேலும் கடுமையானதால், நாங்க பிரான்சுக்குப் போக முடிவு செஞ்சோம். தமிழர்கள் நெனைச்சவுடன் வெளிநாட்டுக்குப் போக முடியாது. போலீசுக்கும், ராணுவத்துக்கும் தெரியாம, சில காட்டுப் பாதைகள் வழியாக கொழும்பு விமான நிலையத்துக்குப் போய், அங்கிருந்துதான் கிளம்ப முடியும். குடும்பத்தின் பெரியவர்கள் எங்களை ஒவ்வொருவராக பைக்கில் கூட்டிட்டுப் போனாங்க. இரவில் காட்டில் தங்குறதும், பைக் பஞ்சர் ஆகும் போதெல்லாம் தூரத்துக் கிராமங்களில் வண்டியைச் சரி செய்ய ஆள் தேடி அலைவதுமாக அந்தப் பயணம் மூணு நாள் நீடிச்சது. எங்க நிலைமையாவது பரவாயில்லை, சிலர் லாரி டிரைவர்களின் உதவியோடு டீசல் டேங்கில் ஒளிஞ்சுகிட்டு வர முயற்சி செய்வாங்க. சில சமயங்கள்ல அவங்க மூச்சுத்திணறி இறந்த சம்பவங்களும் நடந்துருக்கு’’ என்று சொல்லும் நிருவுக்குப் பாரீசில் பல சவால்கள் காத்திருந்தன.

‘‘பிரான்சுக்குப் புலம் பெயர்பவர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை மொழி. பிரெஞ்சுக்காரர்கள் இங்கிலீஷ் தெரிஞ்சாலும், பிரெஞ்சில்தான் பேசுவாங்க. ‘எங்க நாட்டுக்கு நீ வந்தால், எங்க மொழியில்தான் பேசணும்’ங்கிறதுல அவங்க பிடிவாதமா இருப்பாங்க. வீட்டுல தமிழ், வெளியே பிரெஞ்சுங்கிற முரண்பாட்டைச் சமாளிக்குறது கஷ்டமா இருந்தது. முதல் ஆறு மாசம் வெளியே போகவே விரும்பாம, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன்.. அடுத்தது, பிரான்சின் கடுங்குளிர். இன்னொரு பிரச்னை, பிரெஞ்சு சாப்பாடு. உப்பும் காரமும் ரொம்பக் குறைவான உணவுக்குப் பழகுறதுக்கு ஆரம்பத்துல மிகவும் சிரமப் பட்டேன் பள்ளிக்கூடத்துல கூட எனக்கும் பிரெஞ்சு மாணவர்களுக்கும் இடையே வித்தியாசம் பளிச்னு தெரியும். டீச்சர்கிட்டே அந்த மாணவர்கள் உட்கார்ந்துகிட்டே பேசுவாங்க. நான் மட்டும் நம்ம ஊர் வழக்கப்படி சட்டுனு எழுந்து நின்னுடுவேன். இதைப் பார்த்து வகுப்பே சிரிக்கும்! பிரெஞ்சு வாழ்க்கைக்கு ஏற்றபடி நான் மாற மூணு வருஷம் ஆனது!’’ என்று கூறும் நிரு வீட்டின் எதிர்ப்பையும் மீறி இசை படித்தவர்.

‘‘ப்ளஸ் டூவுக்கு நிகரான படிப்பை முடிச்சிட்டு, இசையைக் கற்றுக் கொள்ள முழு மூச்சாக இறங்குனேன்.. காலையில் சவுண்ட் இன்ஜினியரிங் காலேஜுக்கும், மதியம் இசைப்பள்ளிக்கும் போவேன். தமிழகத்துலேர்ந்து பாரீசுக்கு வர்ற இசையமைப்பாளர்களை எல்லாம் தேடித் தேடிப் போய்ச் சந்திப்பேன். மெல்ல மெல்ல இசையின் நுட்பங்கள் புரிபட ஆரம்பிச்சது. நிரு எந்த இசையமைப்பாளரிடமும் உதவியாளராக இருந்ததில்லை.

‘நீலம்’, ‘மூங்கில் நிலா’ உட்பட இவர் இசையமைத்த ஆல்பங்கள் ‘கலாபக் காதலன்’ படத்தில் பணிபுரியும் வாய்ப்பைத் தேடித்தந்தன. ‘‘கலாபக் காதலனுக்கு நான் இசையமைத்த பாடல்கள் அவ்வளவு பிரபலமாகலை. தமிழ் சினிமாவின் இசையை நான் இன்னும் புரிஞ்சிக்கணும்னு உணர்ந் தேன். பிரெஞ்சு மொழியைக் கத்துக்கிட்டது போல இதுவும் முடியும்னு நம்பினேன். தொடர்ந்த பயிற்சிகளுக்கு நான் எதிர்பார்க்காத ஒரு கதவு திறந்தது. டைரக்டர் செல்வம் தனது முதல் படமான ‘‘ராமேஸ்வர’த்துக்கு இசையமைக்க என் மேல் நம்பிக்கை வச்சு வாய்ப்பு தந்தார். எங்களின் இழப்பையும் துக்கத்தையும் சொல்லும் படத்துக்கு இசையமைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்!’’ நிறைவாகச் சொல்கிறார் நிரு.

_ஆனந்த் செல்லையா
படங்கள் : ஆர்.. கோபால்

Wednesday, January 30, 2008

செ.யோகநாதன்

செ. யோகநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர். ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோடிகளில் ஒருவர்.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். பெருமளவு சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியவர். இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றிருக்கிறார். தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்தும் பாராட்டும், பரிசும் பெற்றவர்.

கலைச்செல்வி பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1960, 1964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழுமத்தில் ஒருவர். பின்னர் தமிழகப் பத்திரிகைகளிலும் நிறைய எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி அவர் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த வேளையிலேயே வெளிவந்து விட்டது. அதன் பின்னர் “கண்ணீர் விட்டே வளர்த்தோம்' உட்பட தமது சிறுகதைத் தொகுதிகள் சிலவற்றை வெளியிட்டார். தமது குறுநாவல்களையும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.


குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய இவர் அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். இவர் தமிழகத்திலும் நன்கு அறியப் பட்டவர். தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குனராகவும் செயற்பட்டார்.

தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு அவர்களை தமிழக வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியவர். இவரது படைப்புக்களுக்கு இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் பரிசில்களும், விருதுகளும் கிடைத்தன.

இவர் தனது 66 ஆவது வயதில் 28-01-08 திங்கள் அன்று யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் காலமானார்.

இவர் இதுவரை எண்பத்திநான்கு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

இவரது நூல்களில் சில
யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
அசோகவனம் (சிறுகதைகள், 1998)

Wednesday, January 02, 2008

இளங்கீரன்

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்த இளங்கீரன்!

- த.சிவசுப்பிரமணியம் -

ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் முற்போக்கு எழுத்தாளர்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியதன் மூலம் ஈழத்து இலக்கியம் தனித்துவம் பெற்றதாக உயர்ந்து நிற்கின்றது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பு விசாலமானது. அத்தகைய இலக்கியப் பரப்பில் தடம் பதித்த இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஒருவராக மதிக்கப் படுகின்றார். சமகால ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதும் எவரும் அவரை விட்டுவிட்டு எழுத முடியாத அளவுக்கு அவரது பங்களிப்பின் முக்கியம் பரவலாக உணரப் பட்டுள்ளது.

அவரது படைப்பாற்றலின் வளர்ச்சி அவரது சமூக உணர்வின் வளர்ச்சியை ஒட்டியே நிகழ்ந்துள்ளமையே இதற்கான காரணமாகும். 1950 களிலிருந்து 1970கள்வரை படைப்பிலக்கியத் துறையில் இளங்கீரன் மும்முரமாகச் செயற்பட்டார். எழுத்தையே வாழ்வாகக் கொண்ட ஒருவராக வாழ்ந்து காட்டியிருக்கின்றார். இக்கால கட்டத்தில் அவரது எழுத்தும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் ஈழத்தின் சமூக உணர்வின் வளர்ச்சியையொட்டிய விருத்தியினைக் காட்டி நிற்கின்றன. இளங்கீரன் பல்வகைப் பரிமாணங்களையுடைய ஒருவராக அறியப் படுகின்றார். ஒரு சிறுகதை எழுத்தாளராக, நாடகத்துறை சார்ந்தவராக கட்டுரையாளராக, பத்திரிகை ஆசிரியராக, சஞ்சிகை இயக்குநராக, திறனாய்வாளராக என்றெல்லாம் தடம் பதித்தவராக அறியப்பட்டாலும் அவர் சிறந்த நாவலாசிரியராகவே முத்திரை பதித்துள்ளார். இருபதுக்கும் அதிகமான நாவல்களைப் படைத்த இவர் சமூக உணர்வின் வளர்ச்சியையும் சமூக மாற்றத்திற்கான விளைவையும் அடையாளம் காட்டக் கூடிய வகையிலேயே படைப்பாற்றல் மிக்கவராக வெளிவருகின்றார்.

இவரது முதலாவது நாவலாகிய `நீதியே நீ கேள்' வெளிவந்ததும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நாவல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றுக் கொண்டது.

`அவளுக்கு ஒரு வேலை வேண்டும்' என்ற இவரது நாவல் வீரகேசரிப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. இந்நாவல் இளங்கீரனின் அரசியல் சமூக உணர்வினதும் சமூகச் செயற்பாட்டினதும் உச்ச நிலையை அடையாளங் காட்டும் ஒரு காலத்திற்குரியது. கொழும்பு நகர வாழ்வில் உழைத்துண்ணும் தேவையுள்ள கீழ் நடுத்தர வகுப்புப் பெண்கள் தொடர்பான இக் கதையில் வரும் நிகழ்வுகள் பல ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பிந்திய இன்றைய நவ காலனித்துவச் சூழலிலும் இன்னும் யதார்த்த பூர்வமான சித்தரிப்புக்களாகவே உள்ளன. இந்நாவல் பெண்கள் குறித்த முற்போக்கான ஒரு பார்வையை உடையது என்ற வகையில் வர்க்க உணர்வு குன்றாத நோக்குடன் வரையப் பட்டது. ஈழத்தின் நாவல், இலக்கிய வரலாற்றில் முதன்மை நிலையில் வைத்துக் கணிக்கப் படுபவர்களுள் ஒருவராக எழுத்தாளர் இளங்கீரன் மதிக்கப் படுகின்றார். இந்நாவல் பத்திரிகையில் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின் 2000 ஆம் ஆண்டு நூலுருப் பெற்றுள்ளது. கடந்த தசாப்தங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் மத்தியில் நிலவிய வர்க்க ஒற்றுமையையும் உறவையும் இந் நாவலூடாகத் தரிசிக்கும் போது, இன உறவின் விருத்தியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பலத்திலும் நம்பிக்கையின் நூலிழைகள் ஊடாடுவதனை உணர முடிகிறது.

இவர் எழுதிய `தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும்', `ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்', `பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துகளும்' ஆகியன முக்கிய வரலாற்றுப் பதிவுகளை உள்ளடக்கியவையாக இன்று இருப்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்பவர்களுக்கு இந்நூல்கள் பெரிதும் வேண்டப் படுவனவாக அமையும்.

1950 க்கு முன் இந்தியாவைத் தாய் நாடாகவும், இலங்கையைச் சேய் நாடாகவும் இலங்கைத் தமிழர் கருதி வந்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட உணர்வில் இந்தியாவில் இருந்து வெளிவரும் நூல்களையும், சஞ்சிகைகளையும், பத்திரிகைகளையுமே விரும்பிப் படித்தனர். ஆனால் இவை ஈழத்தமிழரின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள், அபிலாசைகள், சிந்தனைகள் ஆகியவற்றைச் சித்தரிப்பதாக அமையவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப வேண்டிய ஆதங்கம் ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் வலுப்பெற்று நின்றது. ஈழத்து இலக்கியத்திற்குப் புதிய படைப்பிலக்கியப் பாதை வேண்டுமென்பதால் அதை நோக்கிய நகர்வுகள் இடம்பெறலாயின. அந்தத் தளத்தில் முன்னின்று இளங்கீரன் துணிந்து செயற்பட்டார்.

1954 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவப் பட்டது. இச் சங்கம் நடத்திய இலக்கிய இயக்கத்தினூடாக ஈழத்து எழுத்தாளர் மத்தியிலும் ஈழத்துப் படைப்பிலக்கியம் சம்பந்தமாகவும் விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட்டது. எனவே, ஈழத்தின் படைப்பிலக்கியம் தமிழ் எனும் பொதுப் பரப்புக்குள் அடங்கும் அதே வேளையில் அதன் தனித்துவத்தைக் காட்டவும், அத்தனித்துவத்தை நமது மக்கள் இனங்கண்டு அதன்மீது தமது இலக்கிய உணர்வைப் பதிய வைக்கவும், நேசிக்கவும் யதார்த்தவாதக் கோட்பாட்டை எளிதில் புரிந்து கொள்ளவும் அதற்குத் `தேசியம்' என்னும் சொற்பிரயோகம் தேவையாக இருந்தது. எனவே, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது முதலாவது மாநாட்டில் முன் வைத்த ஜனநாயக யதார்த்தவாதக் கோட்பாட்டை அடியொட்டி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1960 இல் தேசிய இலக்கியத்தைப் பிரகடனஞ் செய்தது. இதனைத் தொடர்ந்து தேசிய இலக்கியம் பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டியிருந்தது. 1961 இல் வெளியான இளங்கீரனின் கலை இலக்கியச் சஞ்சிகையான, `மரகதம்' இப் பணியை ஏற்று தேசிய இலக்கியம் பற்றிய தெளிவை மக்களுக்கு ஊட்டியது.

மரகதத்தின் முதல் இதழில் பேராசிரியர் க.கைலாசபதி `தேசிய இலக்கியம்' பற்றிய தனது முதலாவது கட்டுரையை எழுதினார். அதனை அடுத்து ஏ.ஜே.கனகரத்தினா, அ.ந.கந்தசாமி ஆகியோரின் எழுத்துக்களும் மரகதத்தில் வெளிவந்தன.

தேசிய இலக்கியம் முன்வைக்கப் பட்டதையும், ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் வாசகர்களால் வரவேற்கப் பட்டதையும் தொடர்ந்து இலக்கிய உலகில் செல்வாக்கை இழந்திருந்த மரபு இலக்கிய வாதிகள் கடும் தாக்குதல்களை நடாத்தினார்கள். கண்டனக் கணைகளை வீசினர். போதிய கல்வியறிவும், படிப்பும் இல்லாதவர்கள் தமிழ் மரபு தெரியாதவர்கள் மரபை மீறி எழுதும் இவர்கள் மட்டமான எழுத்தாளர்கள். இவர்களின் இலக்கியம் `இழிசனர் இலக்கியம்' என்றெல்லாம் வசை பாடினர். இதனை ஒட்டிய மரபுப் போராட்டம் தொடங்கியது. 1962 ஜனவரியில் தினகரன் பத்திரிகை தற்கால தமிழ் இலக்கியம் தமிழ் மரபுக்கு புறம்பானதா என்னும் விவாதத்தைத் தொடக்கி வைத்தது. விவாதக் கட்டுரைகள் வெளிவந்தன. முற்போக்கு எத்தாளர் தரப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, அ.ந.கந்தசாமி, இளங்கீரன் ஆகியோர் ஆக்கபூர்வமான விவாதக் கட்டுரைகளை எழுதினர். இறுதியில் படைப்பிலக்கிய வாதிகள் சார்பில் விவாதம் முடிவுற்றது.

1962 இல் நடந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் போது `புதுமை இலக்கியம்' மலருக்குப் பேராசிரியர் க.கைலாசபதி `சிறுகதை' என்னும் கட்டுரையை எழுதியிருந்தார். கைலாசபதி அவர்கள் தினகரன் ஆசிரியராக இருந்த போது இலக்கிய ரீதியான புதிய விடயங்களை வெளியிடுவதில் ஆர்வமுடையவராக இருந்தார். அவற்றில் ஒன்று `நான் விரும்பும் நாவலாசிரியர்' என்னும் தலைப்பில் இலக்கியப் படைப்பாளிகளை எழுதத் தூண்டியதாகும். மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை பற்றி இளங்கீரன் சிறப்பான கட்டுரையை எழுதியிருந்தார். தினகரன் தமிழ்விழா மலருக்கு `தமிழுணர்ச்சி' என்னும் கட்டுரையும் `கொச்சை' என்னும் கட்டுரையை மரகதத்திலும் எழுதியிருந்தார். தனது கட்டுரைகள் பற்றி இளங்கீரன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். `எனது கட்டுரைகள் அனைத்தும் ஈழத்தமிழ் இலக்கிய அரங்கில் சர்ச்சைக்குள்ளான விடயங்களையும் படைப்பிலக்கியங்களைப் பற்றிய புதிய சிந்தனைகளையும் அணுகு முறைகளையும் எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளதால் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இவை ஒருவகையில் ஆதர்சமாகவும் அமையலாம்'.

சமுதாயத்தில் வாழ்வு மறுக்கப்பட்ட, வாழப் பிறந்த மக்களின் வாழ்வுக்கான உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கான போராட்டங்களைப் பிரதி பலிக்கும் வாழ்வின் மீது அவர்களது போராட்டத்தின் வெற்றியின் மீதும் நம்பிக்கையூட்டும் இலக்கியங்களையும் மக்களின் யதார்த்த வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் பிரதிபலிப்பதோடு, வாழ்க்கையின் விமோசனத்திற்கான சரியான பாதையைச் சுட்டிக் காட்டும் இலக்கியங்களையும் சரிநிகரான மக்களின் வாழ்க்கையை அன்றாட நிகழ்ச்சிகளைக் கருவூலமாக்கி அவர்களைப் பாத்திரமாக்கிக் கொண்டு அப்பாத்திரங்களின் மூலம் உயர்ந்த இலட்சியங்களை முன்னுக்குக் கொண்டுவரும் இலக்கியங்களையும் இளங்கீரன் படைத்துள்ளார்.

மனிதனுக்குள் உயர்வு, தாழ்வு காட்டும் சாதியமைப்பு, பெண்ணடிமைத்தனம், வாழ்க்கை உரிமைகளை மறுப்பது, மூடநம்பிக்கை போன்ற சமுதாயத் தீம்புகளை எதிர்த்துப் போராடுதல் என்ற இலட்சியத்துடன் நின்று முற்போக்கு இலக்கியங்களைப் படைத்த முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன் இன்றும் எங்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார்.

நன்றி: தினக்குரல் (டிசம்பர் 21, 2007)