Monday, May 19, 2008

தெ. நித்தியகீர்த்தி

தெ. நித்தியகீர்த்தி இலங்கையின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நாடக இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.

இவர் இலங்கையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலி கிழக்கைச் சேர்ந்தவர். தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் அவ்வப்போதான ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்தும் இலக்கிய உலகோடு இணைந்திருப்பவர். நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராக இயங்கி தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றி தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவுஸ்திரேலியாவிலும் அவர் ஓயவில்லை. அங்கும் விக்றோரியா தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து பணியாற்றியதோடு நாடகங்களும் எழுதி இயக்கி மேடையேற்றியிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நாடகத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர்.

இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகின. புலம் பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும் இவரது படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளிலும் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் சுடரொளி, ஞானம், அவுஸ்திரேலிய ஈழமுரசு போன்ற பல பத்திரிகைகளிலும் எழுதுகிறார். குறிப்பிடத்தக்க கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இவரது நூல்கள்
மீட்டாத வீணை (புதினம்), (கமலா வெளியீடு, முதற் பதிப்பு - மார்கழி 1974, பருத்தித்துறை, சிறீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம்)


இவரது நாடகங்கள்

ஈழத்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
தங்கப் பதக்கம்
தங்கம் என் தங்கை
நீதி பிறக்குமா?
பாட்டாளி
பிணம்
மரகதநாட்டு மன்னன்
வாழ்வு மலருமா

நியூசிலாந்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
கூடு தேடும் பறவைகள்
மரணத்தில் சாகாதவன்

அவுஸ்திரேலியாவில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
பறந்து செல்லும் பறவைகள்
ஊருக்குத் தெரியாது
வேங்கை நாட்டு வேந்தன்

இவரது நாடகங்களில் சில பரிசில்களும் பெற்றுள்ளன.

No comments: