Wednesday, January 30, 2008

செ.யோகநாதன்

செ. யோகநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர். ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோடிகளில் ஒருவர்.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். பெருமளவு சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியவர். இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றிருக்கிறார். தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்தும் பாராட்டும், பரிசும் பெற்றவர்.

கலைச்செல்வி பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1960, 1964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழுமத்தில் ஒருவர். பின்னர் தமிழகப் பத்திரிகைகளிலும் நிறைய எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி அவர் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த வேளையிலேயே வெளிவந்து விட்டது. அதன் பின்னர் “கண்ணீர் விட்டே வளர்த்தோம்' உட்பட தமது சிறுகதைத் தொகுதிகள் சிலவற்றை வெளியிட்டார். தமது குறுநாவல்களையும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.


குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய இவர் அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். இவர் தமிழகத்திலும் நன்கு அறியப் பட்டவர். தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குனராகவும் செயற்பட்டார்.

தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு அவர்களை தமிழக வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியவர். இவரது படைப்புக்களுக்கு இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் பரிசில்களும், விருதுகளும் கிடைத்தன.

இவர் தனது 66 ஆவது வயதில் 28-01-08 திங்கள் அன்று யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் காலமானார்.

இவர் இதுவரை எண்பத்திநான்கு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

இவரது நூல்களில் சில
யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
அசோகவனம் (சிறுகதைகள், 1998)

No comments: