Friday, September 05, 2008

கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்)

கே. எஸ். பாலச்சந்திரன் (மருதங்கேணி,பளை, இலங்கை) ஈழத்தின் மெல்லிசைப் பாடகர்களில் ஒருவர். வானொலிக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு
இவர் சிற்றம்பலம்(வல்வெட்டித்துறை), சின்னப்பிள்ளை(மருதங்கேணி) தம்பதிகளின் புதல்வர். போராளிக்கலைஞர் மேஜர் சிட்டுவின் சகோதரன். மருதங்கேணியில் பிறந்து வளர்ந்தவர். 17வயதுக்குப் பின் திருகோணமலைக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வாழ்வு அமைத்துக் கொண்டவர். 1985 இல் இருந்து ஜேர்மனியில் வட்கசன் நகரில் வசித்து வருகிறார்.

மெல்லிசைப் பாடல்கள்
இவர் சிறுவயதிலேயே பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் இசை நிகழ்சிகளில் மேடையேறிப் பாடினார். ஒரு சமயம் கொழும்பில் நடந்த ஒரு நிகழ்சியிலும் இவர் பாடிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் மெல்லிசை ஆர்வலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் இவரின் குரல் வளத்தைக் கண்டு இவரை அழைத்து இலங்கை வானொலியின் ஒரு விளம்பரத்துக்குப் பாட வைத்தார்கள். இப்படியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்குள் பிரவேசித்த இவர் அங்கு நடந்த ஒரு மெல்லிசைப் பாடகர் தேர்வில் கலந்து கொண்டார். குரலில் நல்ல வளம் மிக்க இவர் முதல் தரத்திலேயே மோகன்ராஜ் இன் தந்தை ஆர். முத்துச்சாமி அவர்களால் தேர்வு செய்யப்பட்டு மெல்லிசைப் பாடகர் ஆனார். இவரது முதற்பாடல் இசைக்காய் நான் உனது இதயத்தை... என்று தொடங்கும் பாடல். தற்சமயம் ஜேர்மனியின் பல பாகங்களிலும் அரங்கேறி இசை நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டிருக்கிறார்.

இவர் திரைப்படப் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இவர் பாடிய முதல் திரைப்படம் புதிய காற்று.

பாடிய சில மெல்லிசைப் பாடல்கள்
1-பெற்ற மனம் பித்து என்பார் பிள்ளை மனம் கல்லு என்பார்... (வரிகள்:ஈழத்து இரத்தினம், இசை: மோகன்ராஜ்)
2-இசைக்காய் நான் உனது இதயத்தை...
3-தாயான உன்னை நோயாளி ஆக்கி தரை மீது வந்தேன் அம்மா...
4-சந்திர முகம் உனதோ சிந்திடும் நிழல்.. (இசை: மோகன்ராஜ்)
5-அன்னைக்கு இல்லாத பாசமா... (வரிகள்: ஈழத்து இரத்தினம்)

பாடிய சில திரைப்படப் பாடல்கள்
1-மலை நாட்டில் ஒரு மாற்றம் தர வேண்டும்... (படம்: புதிய காற்று)
2-நான் உங்கள் தோழன்... (படம்: வி. பி. கணேசனின் நான் உங்கள் தோழன்)

இசைக்குழு
இவர் மிகவும் பிரபலமாக இருந்த சுண்டிக்குளி இராஜன் இசைக்குழுவின் இயக்குனராகவும் இருந்தார். முதலில் இந்த இசைக்குழுவை இயக்கி வந்த குணசேகரன்(பொறியியலாளர்) என்பவரே இவரிடம் இந்த இசைக்குழுவைக் கையளித்தார்.

சுவையான தகவல்
ஒரே காலத்தில், ஒரே பெயரில் இரு கலைஞர்கள் அதுவும் ஒரே இடத்தில் இருப்பது எத்துணை சிக்கல்களைத் தரக்கூடியது. அந்த சிக்கல்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலைஞர்களும், இலங்கை வானொலியின் நேயர்களும் ஆளாகும் வகையில் இந்த மெல்லிசைப் பாடகர் கே. எஸ் . பாலச்சந்திரனும், அண்ணை றைற் பாலச்சந்திரனும் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். இப்போதும் பலருக்கு இவர்களை யார் யாரென இனம் காணுவதில் குழப்பம் இருக்கிறது. இருவருமே கே. எஸ் . பாலச்சந்திரன்தான்.

வெளி இணைப்புக்கள்
பெற்ற மனம் பித்து என்பார்

Monday, August 25, 2008

தாட்சாயணி (பிரேமினி )

தாட்சாயணி என்ற புனைபெயரில் எழுதிக் கொண்டிருக்கும் பிரேமினி சபாரத்தினம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதியவைகள், பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் முதற் பரிசில்களைப் பெற்றிருக்கிறார்.

தாட்சாயணி இலங்கையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி.

இவர் ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். இவரது கவிதை ஒன்று 1993இல் சுபமங்களா வெளியிட்ட இலங்கைச் சிறப்பிதழில் பிரசுரமாகி பலரது கவனத்தையும் பெற்றது. ஒரு மரணமும் சில மனிதர்களும் சிறுகதைத் தொகுப்பு 2004 - ஞானம் விருது பெற்றது.

இவரது நூல்கள்
ஒரு மரணமும் சில மனிதர்களும் - சிறுகதைத் தொகுப்பு (2004)

சுல்பிகா

சுல்ஃபிகா ஈழத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் கவிஞர். எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், சுமார் பத்து ஆண்டு காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பலகலைக் கழகத்தின் கல்வியியல் டிப்ளோமாப் பட்டமும் பெற்ற இவர் பின்னர் இலங்கைத் தேசிய கல்வி நிறுவகத்தில் செயல்திட்ட அதிகாரியாகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். பெண்களின் முன்னேற்றம், விஞ்ஞானக் கல்வி, கல்விச் சிந்தனைகள் என்பன தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவரும் இவர் கவிஞராக மட்டுமன்றி ஆய்வறிவாளராகவும் முகிழ்த்துள்ளார்.

இவரது நூல்கள்
விலங்கிடப்பட்ட மானிடம் (1994)

சித்திரலேகா மௌனகுரு

சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.

இவரது நூல்கள்
சொல்லாத சேதிகள்
சிவரமணி கவிதைகள்
உயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)

கோகிலம் சுப்பையா

கோகிலம் சுப்பையா இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர்.

இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் (1947) பதுளை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையா என்பவரை திருமணம் செய்ததின் மூலமே மலையக மக்களின் வாழ்க்கையை அறிந்து கொண்டவர். 1956ல் செக் நாட்டில் நடைபெற்ற உலகப் பெண் தொழிலாளர்களின் மகாநாட்டில், மலையகப்பெண்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். அங்கே தமிழ் அறிஞரான பேராசிரியர் Kamil Zvelebil அவர்களைச் ச்ந்திக்க நேர்ந்ததினால் அவரின் ஆலோசனைப்படி தனது தூரத்து பச்சை நாவலை எழுதத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார். 1965 இல் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியிடப்பட்ட இந்த நாவல், Mirage என்ற பெயரில் ஆங்கிலத்தில் இவராலேயே மொழிபெயர்க்கப்பட்டது. பல கவிதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இவரது நூல்கள்
தூரத்துப் பச்சை (நாவல்)
Mirage தூரத்துப்பச்சை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு )

இவரைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் (ஆங்கிலத்தில்)

Tuesday, August 05, 2008

வாசுகி கணேஷானந்தன்

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்டவரும் அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவின் ஹார்வார்ட் கல்லூரியில் பயின்று தற்போது நியூயோர்க்கில் வசித்துவருபவருமாகிய இளம் பெண் எழுத்தாளர் வாசுகி கணேஷானந்தன் 'லவ் மேரேஜ்'( காதல் திருமணம்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் வெளியான இந்த ஆங்கில நாவல் இலங்கை இனமோதலை பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட ஒன்று.

இலங்கை இனப்பிரச்சினையை பின்புலமாகக் கொண்டு கடந்த ஒரு சில தசாப்தங்களில் எழுதப்பட்ட சில நாவல்கள் வரிசையில் இதுவும் வருகிறது.

கதை அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழும் இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெண்ணான யாழினியையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகாலம் போராளியாக இருந்து, நோய்வாய்ப்பட்ட நிலையில் வாழ்க்கையின் இறுதி நாட்களில், கனடாவுக்கு செல்ல புலிகளால் அனுமதிக்கப்படும் அவரது மாமா குமரன் ஆகியோரையும் சுற்றிச் சுழல்கிறது.

இந்தக் கதை மூலம் இலங்கையின் இனப்பிரச்சினை, ஆயுதப்போராட்டம், இனப் பிரச்சினையின் சமூகத்தாக்கம் ஆகியவற்றை வாசுகி ஆராய்கிறார்.

Saturday, June 14, 2008

சிவலிங்கம் சிவபாலன்

எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் (கட்டட வரையுனர்) இலக்கியச் செழுமை மிக்க யாழ்ப்பாணத்திலுள்ள நாயன்மார்கட்டு கிராமத்தில் 1954ல் பிறந்து, வீரம் விழைந்த உரும்பிராய் மண்ணில் ஊன்றிக் கால் பதித்தவர்.

1985 இல் பிரான்சிற்கு புலம் பெயர்ந்தார். பழகுவதற்கு இனிமையானவர். எவரையும் எளிதில் நண்பராக்கிக் கொண்டு விடுவார். தமிழ் மக்களுக்கான விடியல் விரைவில் வரவேண்டும் என விரும்பும் பலரில் இவரும் ஒருவர். வி. ரி. இளங்கோவன்.. தியாகி சிவகுமாரன் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார்.

ஊரில் இருந்த காலத்திலேயே தேன்மலர் எனும் சஞ்சிகையை நடத்தியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை என தன் எழுத்தை விரிவு படுத்தினார். ஈழமுரசு, எரிமலை, உயிர்நிழல், போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதி வந்துள்ளார். 1998 ல் ‘சுரங்கள் மாறி……’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். பலரையும் நேசித்தார். எழுத்தாளர் கலாநிதி சொக்கன் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவரின் மாணவன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அதனால்தான் காற்றுவெளி நூலகம் வெளியிடும் இலக்கியப்பூக்கள் எனும் தொகுதிக்கு கலாநிதி சொக்கன் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதித் தந்துள்ளார்.

நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் இங்கிலாந்திற்கு வந்த பின்பு ஒரு இலக்கிய வெறுமையை உணர்ந்தவராகக் காணப்பட்டார். அதனால்தானோ என்னவோ காற்றுவெளி நூலகத்தை தன் வாசிப்புக்காகப் பயன்படுத்த தொடர்பு கொண்டார். சில நாட்களிலேயே இதய அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னரும் இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்புகளை அதிகமாகவே பேணிவந்தார். இலக்கியம் பற்றி பேசுவதற்கான தன் ஆதங்கங்களை, ஆர்வத்தை எழுத்தாளர்களுடன் பேசும் போது வெளிப் படுத்தினார். அவரின் வார்த்தைகளில் மெல்லியதான சோகம் இழையோடியதையும் எம்மால் உணர முடிந்தது. சிறுவயதின் நாடக முயற்சிகளை மீட்டுப் பார்த்து இப்பொழுது அது முடியாத ஏக்கம் எமக்குப் போலவே அவருக்கும் இருந்துள்ளது. தன் படைப்புகள் முழுவதையும் தொகுத்து ஒரு நூலாகவும், தனித்து ஒரு நாவலும் எழுதத் திட்டமிட்டிருந்தார்.

இவர் 22.05.2008 லண்டனில் காலமானார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டன் சென்ற இவருக்கு திடீரென இருதய வருத்தம் ஏற்பட்டது. அதனால் உடன் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. பின்பு அவர் சுகமடைந்து வந்தார். ஆனாலும் 22ம் திகதி திடீரென ஏற்பட்ட மயக்கம் அவரை மீளாத்துயிலில் ஆழ்த்திவிட்டது.

கடந்த 10ம் திகதி (10 - 05 - 2008) மாலை லண்டனில் நடைபெற்றஇ வி. ரி. இளங்கோவன் அவர்களின் 'இளங்கோவன் கதைகள்" சிறுகதைத் தொகுப்பு அறிமுகவிழாவிலும் இவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதுவே இவர் கலந்துகொண்ட இறுதி இலக்கிய நிகழ்வாகும். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப்பல படைப்புகளைத் தந்த சிவபாலன் ஐரோப்பாவில் இயங்கும் பல்வேறு தமிழ் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டவர்.

புன்சிரிப்புத் தவழும் அழகான தோற்றமும், எவருடனும் அன்பாக இனிய குரலில் பேசும் சுபாபமும் கொண்ட அவரை இலக்கிய நெஞ்சங்கள் எவரும் எளிதில் மறந்திட முடியாது.

தகவல் - பதிவுகள்