Tuesday, April 05, 2011

மாலினி பரமேஸ்

மெல்லிசைக்கு மெருகூட்டிய வான்மதி

இலங்கையில் சங்கீத கலைஞர்களும் சிறந்த தமிழ் ஒலிபரப்புச் சேவையும் இருந்த போதும் அறுபதுகளில் ஈழத்தில் இசைத்தட்டு என்ற ஒன்று இருக்கவேயில்லை. அதே வேளையில் திருகோணமலையில் வாழ்ந்து வந்த பிள்ளைப்பாட்டுக் கலைஞர் என்ற கெளரவம் பெற்ற யாழ்நூல் யாத்தளித்த சுவாமி விபுலானந்தரின் முதல் மாணவன் வித்தியாதிகாரி மா. பீதாம்பரத்தின் புதல்வர்களான பரமேஸ் கோணேஸ் இசைக் கலைக்கூடம் ஆரம்பித்து 68 முதல் இசைத் தென்றல் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வர ஆரம்பித்தனர்.

திருகோணமலையில் சென் மேரீஸ் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்தான் மாலினி பரமேஸ். 69 முதல் பரமேஸ் கோணேஸ் இசைத்தென்றலின் ரசிகையாக இருந்தவர். இந்த வேளையில் சிவமாலினியின் அன்புத் தந்தையார் சங்கீத பூஷணம் திருநெல்வேலி நமச்சிவாயம் சிவபதமடைந்த செய்தி கேட்டு யாழ்நகர் சென்றுவிட்டார் மாலினி.

68 இல் ‘உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது’ என்று ஆரம்பமாகும் பரமேஸ் இயற்றிய பாடல் தனக்காகவே பாடப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டார் சிவமாலினி. பின்னர் சங்கீத பூஷணம் விருதை பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று தந்தை நமச்சிவாயத்தின் ஆத்ம சாந்திக்காக கல்வியில் வெற்றியும் கண்டார்.

1970ம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் ஈழத்தமிழ் இசைத்தட்டாக ஒலித்த பரமேசின் உனக்குத் தெரியுமா பாடல் இலங்கை மட்டுமல்ல ஆசிய சேவையிலும் அண்ணாமலை பல்கலைக்கழகம் வரையும் ஒலித்தது.

கடிதத் தொடர்புகள் சந்திப்புகள் இல்லாது இசைத் தொடர்பாலேயே இரு உள்ளங்கள் இணைந்து பிரியாது பிரியமுடன் 25 வருடங்கள் வாழ்ந்த இனிய காதற் காவியம் பரமேஸ் மாலினியுடையது என்றால் அது மிகையாகாது.

இலங்கை வானொலியில் பரமேஸ் கோணேஸ் இருவரின் பாடல்கள் அடங்கிய முதல் தமிழிசைத் தட்டை வர்த்தக சேவையில் முதன் முதலாக ஒலி பரப்பியவர் அமரர் எஸ். வி. மயில்வாகனன்.

தொடர்ந்து தினமும் ஒலிபரப்பி பரமேஸ் மாலினியின் காதல் தூதுவர்களாக அவர்கள் அறியாமலேயே உதவியவர்கள் அப்துல் ஹமீட், ராஜேஸ்வரி சண்முகம், நடராஜசிவம், லோகேஸ் மற்றும் கலைஞர்கள் பலர் என்பது சுவையான ஒரு குறிப்பு.

மேடைகளில் பாடுவதற்கு அக்காலத்தில் பெண் பாடகிகளைத் தேடுவது கஷ்டம். மேடைகளிற் பாடுவதைக் கேவலமாக நினைத்த காலமது. மாலினியின் குடும்பத்தவர்கள் கூட மாலினி மேடைகளிற் பாடுவதையும் முக்கியமாக திரைப்பாடல்கள் பாடுவதையும் அடியோடு விரும்பவில்லை.

கர்னாடக இசை கற்று மாலினி சங்கீத அரங்கேற்றம் செய்யாமல் இசைத் தென்றலில் அரங்கேறிவிட்டார் என்ற இறுக்கமான தாக்கம் அவர் குடும்பத்தினர்க்கு இருந்தது.

இரண்டாயிரத்துக்கும் குறையாத இசைத்தென்றலில் மாலனி அரங்கேறியுள்ளார். வெளிநாடு வந்த பின்னர் தன் பிள்ளைகளையும் இசைத்துறையில் ஈடுபடுத்தினார் மாலினி.

வாழும் போதும் இசைத் தாரகையாய் வாழ்ந்து வாழ்வு முடித்தும் தன் வம்ச விளக்குகள் மூலம் இசைத் தாரகையாய் விளங்குகின்றார் அமரர் மாலினி பரமேஸ்.

மாலினி பரமேஸ் முதன்முதலாக ஜோடி கானம் இசைத்தது திருகோணமலை சென். யோசப்ஸ் கல்லூரி மண்டபத்தில். இதன் பின்னர் நிரந்தரமாக மேடைகளில் மணம் வீச ஆரம்பித்தார் மாலினி.

அன்று மாலினி பாடிய முதற் பாடல் ‘கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ’ என்ற திரைப்படப் பாடல். படத்தில் இப்பாடலைப் பாடுவதற்கு தேர்ந்தெடுத்தவரே மாலினிதான். அந்த ஒரு பாடலின் மூலமே புகழ் சேர்த்தார் மாலினி.

மாலினி வெளிநாட்டில் வாழ்ந்த போது தான் கற்ற கல்வியை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பரமேசுடன் சேர்ந்து பல பாடல்களை இசையமைத்து வீட்டிலேயே 30க்கும் மேற்பட்ட பாடல்களை பரீட்சார்த்த ஒலிபரப்பாக செய்து முடித்தார். அதில் தெரிவு செய்த 14 பாடல்களே 95ல் வெளிவந்த சங்கீத சாம்ராச்சியம் சி. டி.யில் ஒலித்த பாடல்கள்.

அவர் வெளிநாடுகளிலும் தன் இசைப் பயணங்களைத் தொடர்ந்தார். வெளிநாட்டில் தன் இசைப்புதல்விகள் பிரபாலினி பிரபாகரன். பிரியந்தினி பரமேசுடன் அவர் செல்லாத இடங்களேயில்லை.

மனிதர்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட மாலினி சக கலைஞர்களை என்றுமே பகைத்துக் கொண்டதில்லை.

அவரது இறுதி ஊர்வலத்தின் போது சேர்ந்த கூட்டமும் கண்ணீர் விட்டவர்களின் எண்ணிக்கையும் இவரது அன்புள்ளத்தைப் பறைசாற்றும்.

வாழ்ந்தால் இப்படித்தான் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்கு வரைவிலக்கணம் வகுத்துச் சென்றவர் மாலினி.

Quelle - Thinakaran