Saturday, June 14, 2008

சிவலிங்கம் சிவபாலன்

எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் (கட்டட வரையுனர்) இலக்கியச் செழுமை மிக்க யாழ்ப்பாணத்திலுள்ள நாயன்மார்கட்டு கிராமத்தில் 1954ல் பிறந்து, வீரம் விழைந்த உரும்பிராய் மண்ணில் ஊன்றிக் கால் பதித்தவர்.

1985 இல் பிரான்சிற்கு புலம் பெயர்ந்தார். பழகுவதற்கு இனிமையானவர். எவரையும் எளிதில் நண்பராக்கிக் கொண்டு விடுவார். தமிழ் மக்களுக்கான விடியல் விரைவில் வரவேண்டும் என விரும்பும் பலரில் இவரும் ஒருவர். வி. ரி. இளங்கோவன்.. தியாகி சிவகுமாரன் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார்.

ஊரில் இருந்த காலத்திலேயே தேன்மலர் எனும் சஞ்சிகையை நடத்தியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை என தன் எழுத்தை விரிவு படுத்தினார். ஈழமுரசு, எரிமலை, உயிர்நிழல், போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதி வந்துள்ளார். 1998 ல் ‘சுரங்கள் மாறி……’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். பலரையும் நேசித்தார். எழுத்தாளர் கலாநிதி சொக்கன் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவரின் மாணவன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அதனால்தான் காற்றுவெளி நூலகம் வெளியிடும் இலக்கியப்பூக்கள் எனும் தொகுதிக்கு கலாநிதி சொக்கன் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதித் தந்துள்ளார்.

நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் இங்கிலாந்திற்கு வந்த பின்பு ஒரு இலக்கிய வெறுமையை உணர்ந்தவராகக் காணப்பட்டார். அதனால்தானோ என்னவோ காற்றுவெளி நூலகத்தை தன் வாசிப்புக்காகப் பயன்படுத்த தொடர்பு கொண்டார். சில நாட்களிலேயே இதய அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னரும் இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்புகளை அதிகமாகவே பேணிவந்தார். இலக்கியம் பற்றி பேசுவதற்கான தன் ஆதங்கங்களை, ஆர்வத்தை எழுத்தாளர்களுடன் பேசும் போது வெளிப் படுத்தினார். அவரின் வார்த்தைகளில் மெல்லியதான சோகம் இழையோடியதையும் எம்மால் உணர முடிந்தது. சிறுவயதின் நாடக முயற்சிகளை மீட்டுப் பார்த்து இப்பொழுது அது முடியாத ஏக்கம் எமக்குப் போலவே அவருக்கும் இருந்துள்ளது. தன் படைப்புகள் முழுவதையும் தொகுத்து ஒரு நூலாகவும், தனித்து ஒரு நாவலும் எழுதத் திட்டமிட்டிருந்தார்.

இவர் 22.05.2008 லண்டனில் காலமானார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டன் சென்ற இவருக்கு திடீரென இருதய வருத்தம் ஏற்பட்டது. அதனால் உடன் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. பின்பு அவர் சுகமடைந்து வந்தார். ஆனாலும் 22ம் திகதி திடீரென ஏற்பட்ட மயக்கம் அவரை மீளாத்துயிலில் ஆழ்த்திவிட்டது.

கடந்த 10ம் திகதி (10 - 05 - 2008) மாலை லண்டனில் நடைபெற்றஇ வி. ரி. இளங்கோவன் அவர்களின் 'இளங்கோவன் கதைகள்" சிறுகதைத் தொகுப்பு அறிமுகவிழாவிலும் இவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதுவே இவர் கலந்துகொண்ட இறுதி இலக்கிய நிகழ்வாகும். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப்பல படைப்புகளைத் தந்த சிவபாலன் ஐரோப்பாவில் இயங்கும் பல்வேறு தமிழ் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டவர்.

புன்சிரிப்புத் தவழும் அழகான தோற்றமும், எவருடனும் அன்பாக இனிய குரலில் பேசும் சுபாபமும் கொண்ட அவரை இலக்கிய நெஞ்சங்கள் எவரும் எளிதில் மறந்திட முடியாது.

தகவல் - பதிவுகள்