Tuesday, September 16, 2008

நாச்சிமார்கோயிலடி இராஜன்

நாச்சிமார்கோயிலடி இராஜன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்து வில்லிசைக் கலைஞர் ஆவார். புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்
இவர் இலங்கையின் யாழ்ப்பாணம், நாச்சிமார்கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் தற்சமயம் ஜேர்மனியில் பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார். பாடசாலையில் பயின்ற காலத்திலேயே இவரது கலை ஆர்வம் வெளிப்பட்டது.

கலையுலக வாழ்வு
இவர் வில்லிசைகளில் வல்லவர். வில்லிசை நிகழ்ச்சிகளை 1968 இல் ஆரம்பித்து இற்றை வரை நடாத்தி வருகிறார். 1972 இலிருந்து "நாச்சிமார்கோயிலடி இராஜன் வில்லிசைக் குழுவை" நடாத்தி வருகின்கிறார். 1993இல் ஜெர்மனியின் றெயினை ஜெர்மன் தமிழ்ச் சங்கத்தின் வாணி விழாவில் பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமனால் "ஈழவில்லிசைச் செம்மல்" என்ற பட்டத்தைப் பெற்றார். 1996இல் கனடாவில் நிகழ்ந்த உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் அதன் தலைவர் வீரப்பனால் "வில்லிசைக் காவலர் " என்ற பட்டத்தைப் பெற்றார். ரீ.ரீ.என் தொலைக்காட்சியில் இவரது பல வில்லிசைகள் ஒளிபரப்பாகின.

நாடகத் துறை
நாடகத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. ஜெர்மனியில் 1993, 1994, 1995, 1998 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் நடைபெற்ற நாடகப் போட்டிகளில் நான்கு முறைகளும் முதற்பரிசுகளைப் பெற்றுள்ளார். பிறேமன் தமிழ் கலை மன்றத்திற்காக பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். மூன்று தடவைகள் சிறந்த இயக்குனருக்கான தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தங்கப்பதக்கம்
1994 இல் இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றம் நடாத்திய நாடகப் போட்டியில் "எதிர்பார்ப்புகள்" நாடகம் இவரது இயக்கத்தில் முதற் பரிசு பெற்றது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவுசெய்யப்பட்டு இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றத்தால் இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

1995 இல் இராட்டிங்கனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் "நீர்க்கோலம்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவானது. நீர்க்கோலம் சிறந்த நாடக பிரதியாக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், அந்த நாடகத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், சான்றிதழும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் வழங்கப்பட்டது.

1998 இல் எசன் நகரில் ஈழமுரசு பத்திரிகை நடாத்திய நாடகப் போட்டியில் "சுமைகள்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு ஈழமுரசு பத்திரிகையால் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது

திரைப்படத்துறை
புகலிட திரைப்படத்துறையிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. நினைவுமுகம் திரைப்படத்திற்கு திரைக்கதை, உரையாடல் எழுதி இணை இயக்கம், தயாரிப்பு ஆகியற்றில் தடம் பதித்துள்ளார். தொடர்ந்து ஏ.ரகுநாதனின் தயாரிப்பில் பாரிசிலிருந்து தயாரிக்கப்பட்ட தயவுடன் வழிவிடுங்கள் படத்திலும் நடித்துள்ளார். யாரிவர்கள், பொறி, இப்படியுமா? ஆகிய குறும்படங்களை எழுதி இயக்கியுள்ளார். தற்போது இலண்டனில் தயாராகி வரும் ஈழவர் திரைக் கலை மன்றத்தின் நீர்க்கோலம் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். பாரிசிலிருந்து தயாரிக்கப்படும் ஈழத்தவரின் முதல் திரைத் தொடர் நேசங்களுக்காக திரைக்கதை, உரையாடலில் பங்கெடுத்து வருகின்றார்.

வெளிவந்த நூல்கள்
எதிர்பார்ப்புகள் (நாடக நூல்)

Friday, September 05, 2008

கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்)

கே. எஸ். பாலச்சந்திரன் (மருதங்கேணி,பளை, இலங்கை) ஈழத்தின் மெல்லிசைப் பாடகர்களில் ஒருவர். வானொலிக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு
இவர் சிற்றம்பலம்(வல்வெட்டித்துறை), சின்னப்பிள்ளை(மருதங்கேணி) தம்பதிகளின் புதல்வர். போராளிக்கலைஞர் மேஜர் சிட்டுவின் சகோதரன். மருதங்கேணியில் பிறந்து வளர்ந்தவர். 17வயதுக்குப் பின் திருகோணமலைக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வாழ்வு அமைத்துக் கொண்டவர். 1985 இல் இருந்து ஜேர்மனியில் வட்கசன் நகரில் வசித்து வருகிறார்.

மெல்லிசைப் பாடல்கள்
இவர் சிறுவயதிலேயே பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் இசை நிகழ்சிகளில் மேடையேறிப் பாடினார். ஒரு சமயம் கொழும்பில் நடந்த ஒரு நிகழ்சியிலும் இவர் பாடிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் மெல்லிசை ஆர்வலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் இவரின் குரல் வளத்தைக் கண்டு இவரை அழைத்து இலங்கை வானொலியின் ஒரு விளம்பரத்துக்குப் பாட வைத்தார்கள். இப்படியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்குள் பிரவேசித்த இவர் அங்கு நடந்த ஒரு மெல்லிசைப் பாடகர் தேர்வில் கலந்து கொண்டார். குரலில் நல்ல வளம் மிக்க இவர் முதல் தரத்திலேயே மோகன்ராஜ் இன் தந்தை ஆர். முத்துச்சாமி அவர்களால் தேர்வு செய்யப்பட்டு மெல்லிசைப் பாடகர் ஆனார். இவரது முதற்பாடல் இசைக்காய் நான் உனது இதயத்தை... என்று தொடங்கும் பாடல். தற்சமயம் ஜேர்மனியின் பல பாகங்களிலும் அரங்கேறி இசை நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டிருக்கிறார்.

இவர் திரைப்படப் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இவர் பாடிய முதல் திரைப்படம் புதிய காற்று.

பாடிய சில மெல்லிசைப் பாடல்கள்
1-பெற்ற மனம் பித்து என்பார் பிள்ளை மனம் கல்லு என்பார்... (வரிகள்:ஈழத்து இரத்தினம், இசை: மோகன்ராஜ்)
2-இசைக்காய் நான் உனது இதயத்தை...
3-தாயான உன்னை நோயாளி ஆக்கி தரை மீது வந்தேன் அம்மா...
4-சந்திர முகம் உனதோ சிந்திடும் நிழல்.. (இசை: மோகன்ராஜ்)
5-அன்னைக்கு இல்லாத பாசமா... (வரிகள்: ஈழத்து இரத்தினம்)

பாடிய சில திரைப்படப் பாடல்கள்
1-மலை நாட்டில் ஒரு மாற்றம் தர வேண்டும்... (படம்: புதிய காற்று)
2-நான் உங்கள் தோழன்... (படம்: வி. பி. கணேசனின் நான் உங்கள் தோழன்)

இசைக்குழு
இவர் மிகவும் பிரபலமாக இருந்த சுண்டிக்குளி இராஜன் இசைக்குழுவின் இயக்குனராகவும் இருந்தார். முதலில் இந்த இசைக்குழுவை இயக்கி வந்த குணசேகரன்(பொறியியலாளர்) என்பவரே இவரிடம் இந்த இசைக்குழுவைக் கையளித்தார்.

சுவையான தகவல்
ஒரே காலத்தில், ஒரே பெயரில் இரு கலைஞர்கள் அதுவும் ஒரே இடத்தில் இருப்பது எத்துணை சிக்கல்களைத் தரக்கூடியது. அந்த சிக்கல்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலைஞர்களும், இலங்கை வானொலியின் நேயர்களும் ஆளாகும் வகையில் இந்த மெல்லிசைப் பாடகர் கே. எஸ் . பாலச்சந்திரனும், அண்ணை றைற் பாலச்சந்திரனும் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். இப்போதும் பலருக்கு இவர்களை யார் யாரென இனம் காணுவதில் குழப்பம் இருக்கிறது. இருவருமே கே. எஸ் . பாலச்சந்திரன்தான்.

வெளி இணைப்புக்கள்
பெற்ற மனம் பித்து என்பார்