Saturday, July 14, 2007

ஓவியர் விஜிதன்

நேர்காணல்

கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை

சின்ன வயசிலேயே எனக்கு ஓவியத்தில் ஈடுபாடிருந்தது, வீட்டில நான் ஓவியத்துறையில போறது பற்றி ஒரு பிரச்சினையும் இல்லை. நானும் என்னுடைய வழியில் ஓவியத்துறையிலேயே சின்னன் சின்னனாக வளர்ந்து வந்து பாடசாலை, பல்கலைகழகம் அந்த வகையில வெளிப்பட்டதுதான் இந்த ஓவியக் கண்காட்சி என்று சொல்லலாம்.

இந்த விதி முறைகளை தெரிவுசெய்ய அடிப்படைக் காரணம் என்ன?

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிப் போனவுடன், எண்ணெய் வர்ணத்தை பாவிக்கின்ற முறையை அறிந்து கொண்டேன். அந்த முறையை வைத்துக் கொண்டு ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்று யோசித்ததால் சில விடயங்களை புதிதாக செய்திருக்கிறேன். படிப்பித்த மாஸ்டர்மார் அவையள் என்னென்னமாதிரி படிப்பிச்சிச்சினம் அதுகளெல்லாம் ஓவியங்களுக்கூடாக வெளிப்பட்டிருக்கு.

ஓவியர் ரமணி வந்து கூடுதலாக கூடப் படிப்பித்தார். கூடுதலான அளவு அவரைப் பின்பற்றிச் செய்திருக்கிறேன். எனக்கு அவற்ற ஸ்ரைல் பிடிக்கும் அதுகள் இந்த ஓவியங்களில வந்திருக்கு அதுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு நான் என்ன செய்திருக்கிறன் என்பதை இதில பார்க்கக்கூடியதாக இருக்கும்.

இங்கே உங்களுடைய ஓவியங்கள் எல்லாவற்றையும் பார்க்கின்ற பொழுது பயன்படுத்தின உத்திகள் வித்தியாசங்கள் அதிகமாக இருக்கிறது. பாணி என்று சொல்கின்ற பொழுது தனித்துவமான ஒரு பாணி மிக முக்கியமானது. இங்கே ஒவ்வொன்றும் ஒரு சாயலில் இருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் நீங்கள் கற்றுக்கொள்கிற பொழுது எல்லாவற்றையும் அறிந்துகொள்வதாலா?

ஏனென்று சொன்னால் பல்வேறுபட்ட கலைஞர்களை ஆசிரியர்களாகக்கொண்டு வேற வேற பாடங்களை படிச்சிருக்கிறேன். அதில பல உத்தி முறைகள் இருக்கு. அதால ஒவ்வொரு உத்திமுறைகளை பயன்படுத்தி அந்தப்படங்களை செய்திருப்பன். எனக்குப் பாடத்திட்டத்தில இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி வரையறைகள் இருக்கு. அப்ப நான் அந்த வரையறைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அந்தப் படங்களை செய்திருக்கிறேன். அந்தப் படைப்புகள் கட்டாயம் அப்படி இருக்கும். இன்னொன்றை செய்யும் பொழுது வேறு மாதிரி செய்திருப்பேன். இநதப் படைப்பு வித்தியாசமாக இருக்கும். இப்ப நான் படிச்சுக் கொண்டிருக்கும் காலத்தில அதில ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்வதென்பது சாத்தியமில்லா விசயம். ஏனென்று சொன்னால் நான் ஒவ்வொரு ஆசிரியர்களையும் பின்பற்றி அவர்களுடைய விருப்பத்துகேற்றமாதிரி படத்தை செய்து முடிக்கிறேன். அப்படி செய்யப்பட்டப் படங்களைத்தான் இன்றைக்கு காட்சிக்கு வைத்திருக்கிறன் அவை தனித்துவத்தை இழந்திருக்கலாம். ஆனால் குறிப்பாக நான் சொல்லப் போனால்
பொதுவாக சில ஓவியங்களை தனித்துவமாக வைத்திருக்கிறேன் இருளும் ஒளியும் சம்பந்தமான விசயத்தில நான் கூடுதலாக தனித்துவம் என்று சொல்வதை விட நான் அதை எல்லா ஓவியங்களிலும் பெரும்பாலும் கொண்டு வந்திருக்கிறேன். அதாவது
மிகவும் இருட்டான பின்னணியில ஓவியத்தை வரைகின்ற தன்மையைக் கொண்டு வந்திருக்கிறேன். அது நாளடைவில எனது தனித்துவமாக மாறலாம்.

உங்களுடைய ஓவியங்களில் குறைந்த வெளிச்சத்தை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?

ஒரு ரசிகன் ஓவியத்தைப் பார்க்கும் பொழுது அந்த ஓவியத்தை எப்படி பார்க்கிறான் அந்த ஓவியத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டுப் போவதை விட இருட்டா இருக்கா என்ன விசயம் இருக்கென்று கிட்டப்போய் பார்க்கிறானா உண்ணிப்பாப் பார்க்கிறானா தூர நின்று பார்க்கிறானா அப்படியான விசயங்கைள தூண்டக் கூடியது மாதிரி ஒளி அமைக்கிறது முக்கியமான ஒரு விசயம். அது ஓவியத்த மிகவும் ஆழமாப் பார்க்கிற சாத்தியப்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த வகையில இந்த ஓவியக்கூடத்தில ஒளியை குறைச்சு வைத்திருக்கிறேன். அதற்கும் ஓவியங்களில ஒளி இருள் தன்மைய கொண்டு வந்ததுதான் முக்கியமான காரணம் என்பேன்.

கருத்து ரீதியாக இருளை மனங்களின் இருண்மையாக காண்பிக்கிறீர்களா?

எடுத்துக்கொள்ளலாம், ஒளியென்று சொல்லும் பொழுது பார்க்கப்படுகின்ற விசயம் மட்டும் ஒளியை மையப்படுத்தி சுத்திவர இருளாக இருக்கும். ரசிகன் பார்க்கவேண்டிய இடம் மட்டும் ஒளியுடையதாக இருக்கும் பார்வைப்புலத்தில் பார்வை சிதறல் ஏற்படாது அதற்காக இத்தகைய உத்திமுறைகளை கையாள்கிறேன்.

அரசியல் ரீதியான ஓவியங்களையும் வரைந்திருக்கிறீர்கள் நிலக்காட்சிகளை சிதைக்கப்பட்ட முறையில் வரைந்திருக்கிறீர்கள். ஒடுக்குமுறையை சித்தரிக்கும் படங்களில் இருண்மை அதிகமாக இருக்கிறது

எமது சமூகம் ஒரு குழப்பமானது, சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்கின்ற வாழ்க்கை முறை, இவற்றை வெளிப்படுத்தி இருப்பது தவிர்க்க முடியாத விடயம். அந்த வகையில் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமும் அப்படித்தான். இந்த ஓவியக் காண்பியத்துக்குக் கூட சாளரம் வழியே ஓவியனின் விரல்கள் என்றே தலைப்பிட்டிருக்கிறேன். ஒரு முழுமையான, சுதந்திரமில்லாத ஒரு தன்மையை கொண்டிருப்பதனாலேயே ஓவியனாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் சரி ஒரு சுதந்திரமான தன்மையில்லாத நிலையை கொண்டு வந்திருக்கிறேன். அதால இருள் ஒளி என்ற விடயமும் அதுக்குள்ள வருது.

சாதாரன கற்பித்தல் முறையில் ஓவியம் என்பது ஒரு பாடமாக இருக்கிறது, ஒரு புதிய உத்தி முறையை கையாளக்கூடிய அளவிற்கு எங்களுடைய ஓவியக் கற்கை முறை இல்லை என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஏனென்று சொன்னால் நான் கூட பல்கலைக்கழக மட்டத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அங்கும் வித்தியாசமான படைப்புக்களை படைப்பதற்கான கற்பித்தல் முறை இல்லையென்றுதான் சொல்வேன். ஆரம்பத்தில் படித்த அதே பாடத்திட்டங்கள் கொஞ்சம் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டவர்கள் மாதிரி ஏதாவது வித்தியாசமாக படைக்கவேண்டும் ஒரு வடிவமைக்கவேண்டும். அப்படியான புதுமையான விடயங்களை கற்பிக்கின்ற முறைமை காணப்படவில்லை .இதுவொரு முக்கியமான விடயம் என்னுடைய விரிவுரை தவிர்ந்த நேரங்களில் வீட்டிலே வெளிநாட்டு ஓவியங்களை இணையம் மூலமாக பார்த்து அதனோடு சில விடயங்களைப் பெற்றுக்கொண்டு ஏன் இப்படிச்செய்தால் என்ன என்ற கேள்விகளை என்னுள் எழுப்பிக் கொண்டேன். இன்றைக்கு இப்படியான ஓவியங்களை காட்சிப்படுத்துவது முக்கியம் பெற்றிருக்கிறது.

நேர்கண்டவர்- தி.தவபாலன்

Quelle - Erimalai